முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்
டெல்லியில் ராணுவ மருத்துவமனையில் கடந்த இருபது நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார். இவருக்கு வயது 84. இவர் காலமானதை அவரது மகன் அபிஜித் முகர்ஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் கடந்த இருபது நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதுகுறித்து மகன் அபிஜித் முகர்ஜி தனது ட்விட்டர் பதவில், ''மருத்துவர்களின் கடுமையான முயற்சியையும் மீறி எனது தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதும் பிரார்த்தனை மேற்கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி உடல்நலக்குறைவு காணமாக டெல்லியில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அப்போது அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவரது மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் அவர் கோமாவுக்கு சென்றதாகவும், வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தனர்.
இவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தொந்திரவுகளுக்கு இடையே இவருக்கு நுரையீரல் பாதிப்பு, கிட்னி பாதிப்பு என்று உடல் உபாதைகள் ஏற்பட்டன. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
0 Comments