பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன், ஆப்லைன் என இரு முறைகளிலும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தாமல் அவர்களுக்குப் பட்டம் வழங்க முடியாது எனப் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைன், ஆஃப்லைன் ஆகிய இருமுறைகளிலும் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ள மாணவர்களின் வசதிக்காக ஆன்லைன் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பிற மாணவர்களுக்கு ஆப்லைனில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எந்தெந்த மாணவர்களுக்கு எந்த முறையில் தேர்வு நடத்துவது என்பதை அந்தந்தக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களே முடிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் முகாம்களாகச் செயல்படும் கட்டடங்களைத் தவிர்த்துப் பிற கல்லூரிகள், பள்ளிகளில் தேர்வு மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் விவரம், கட்டடங்களின் வசதி, ஆன்லைன் தேர்வா? ஆப்லைன் தேர்வா? என்பது குறித்த விவரங்களைச் சேகரிக்கும் பணி நடைபெறுவதாகவும், விரைவில் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments