நாற்பது ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்ட பெய்ரூட்... 30 நொடியில் 3,00,000 பேர் வீட்டை இழந்த அவலம்

நாற்பது ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்ட பெய்ரூட்... 30 நொடியில் 3,00,000 பேர் வீட்டை இழந்த அவலம்



நேற்றிரவு, லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தின் சேமிப்புக் கிடங்கில் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியது. இந்த வெடி விபத்து லெபனான் நாட்டில் ஏற்பட்ட போர்களை விடவும் அதிகளவு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்திலிருந்து பெய்ரூட் நகரம் மீண்டுவர பத்து வருடங்களுக்கும் மேல் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் ஐந்து பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

லெபனானில் நீண்ட காலமாக அமைதியற்ற சூழலே நிலவுகிறது. அதற்குக் காரணம், அதன் அண்டை நாடுகளான சிரியா மற்றும் இஸ்ரேல் தான். 1985 லிருந்து 2000 - ம் ஆண்டுவரை தெற்கு லெபனானில் ஏற்பட்ட போர், 2006 ல் ஏற்பட்ட ஜூலை போர், 2007 - 2008  ல் ஏற்பட்ட கலவரம் என்று தொடர்ச்சியாக அந்த நாடு பல்வேறு போரியல் துயரங்களைச் சந்தித்துவருகிறது. இதனால் லெபனான் இழந்தது கொஞ்சநஞ்சமல்ல. கடந்த ஒரு சில வருடங்களாகத் தான் லெபனானில் போர் எதுவும் நடைபெறாமல் அமைதி நிலவி வந்தது.

ஆனால், ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நடந்த வந்த போரில் ஏற்படாத துயரம் ஒரேயொரு வெடி விபத்தால் ஏற்பட்டுவிட்டது. ஒரேயொரு வெடி விபத்து மூலம் பெய்ரூட் நகரம் 40 ஆண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளது. மீண்டும் இவற்றைக் கட்டியெழுப்ப பத்திலிருந்து இருபது ஆண்டுகள் கூட ஆகும் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிவிபத்தில், இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், 4000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று அரசுத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஆனால், உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. , இதுவரை 1500 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளனர். அவர்களைத் தேடி மீட்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 500 - க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவர்.


Post a Comment

0 Comments